அன்பும் - அதீத அன்பும்(வன்பும்)

பனி பலவிருந்தாலும்
பிணி மறந்திருந்தாலும்
அன்புக் குரியவரின்  
அளவில்லா அன்பு  ..
கவலை மறக்கும்  ஆனந்த
கண்ணீர் மல்கும் ...!

அன்பாய் நேசித்த
அன்புக் குறியவர்
ஆறுதல் சொல்லி
தேறுதல் செய்பவரென
உச்சத்தில் வைத்தால்
துச்சமாய் நினைக்கிறாய்...

சிந்தனையில் தோன்றும்
சில விஷயங்களை நீ
வருடி இருக்கிறாய்,
வருடியதோடு  நின்றுவிடாமல்
திருடி  இருக்கின்றாய் மனதை
நெருடியும் இருக்கிறாய் சமயங்களில்..

தென்றலாய் வருடியதால்
தெய்வத்திற்கு நிகரான அன்பை
சரணடைதல் முழுமையாக்குமென
சரணடைந்தேன் உன்னிடம்
அளவுக்கு மீறிய அன்பு
ஆபத்து என்பதை  உணராமல்...

அச்சுறுத்துகிறாய் அதீத அன்பில்  
எச்சரிக்கிறேன் அத்தருணங்களில்
அச்சுறுத்தலால் வரும் சச்சரவை
இச்சை கொள்ளாமல்
எச்சரிக்கையாய் எதிர்கொள்கிறேன்
அச்சமூட்டுகிறது அப்படியிருந்தும்....

சித்திரமாக்க முயல்கிறேன்
சித்தம் கலங்க வைக்கிறாய்
இசைவாய் அன்பூட்டிய நீ
வசவு பேசுகிறாய்  அவநம்பிக்கையில்
கலங்காதவனெதற்கும் இம்முறை
கலங்கித்தான் போகிறேன்....

Comments